தளை அறு


தளை அறு

கடவுள் கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள் என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடமையாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்;
கடையர் செல்வர் என்ற தொல்லை
கடவுள் பேர் இழைத்ததே!

உடை சுமந்த கழுதைகொண்
டுழைத்ததோர் நிலைமையும்
உடைமைமுற்றும் படையைஏவி
அடையும் மன்னர் நிலைமையும்
கடவுளாணை யாயின் அந்த
உடைவெளுக்கும் தோழரைக்
கடவுள்தான் முன்னேற்றுமோ?
கழுதைதான் முன்னேற்றுமோ?

ஊரிலேனும் நாட்டிலேனும்
உலகிலேனும் எண்ணினால்
நீர்நிறைந்த கடலையொக்கும்
நேர்உழைப்ப வர்தொகை!
நீர்மிதந்த ஓடமொக்கும்
நிறைமுதல்கொள் வோர்தொகை;
நேரிற்சூறை மோதுமாயின்
தோணிஓட்டம் மேவுமோ?

தொழிலறிந்த ஏழைமக்கள்
தொழில்புரிந்து செல்வர்பால்
அழிவிலாமுதல்கொடுக்க
அம்முதற் பணத்தினால்
பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள் தம்மைஎவியே
தொழில்புரிந்த ஏழைமக்கள்
சோற்றிலேமண் போடுவார்!

நடவுசெய்த தோழர்கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த
கயவர்கூட்ட மீதிலே
கடவுள்என்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக